இந்த வரிசைக் கட்டுரைகள் ஒன்றில் நம் நண்பர் Siva Kumar கீழ்க் கண்டவாறு பதிவிட்டிருந்ததிப் பார்த்திருப்பீர்கள்.
"110-120 கோடி மக்கள் தொகையில் ஒரு 19 லட்சம் பேர் , (0.01 - 0.02%) என்ன ஆகிவிட போகிறது ? தேச பாது காப்பு தோச பாதுகாப்பு என்று கதை விடுவார்கள் .பாசிச வெறுப்பு அரசியல் அதன் உச்சத்தை நோக்கி செல்வதை தான் இது காட்டுகிறது . இன்னொரு தகவல் உலகிலேயே புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வாழ்பவர்களின் இந்தியர்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள்"
அசாமின் மொத்த மக்கள் தொகை 3.14 கோடி. நல்ல நீர்வளம் மிக்க அழகான நாடு. பலதரப்பட்ட மகக்ள் வாழும் ஊர். பழங்குடியினர் பகுதிகளுக்கு - போடோலாண்ட்- தன்னாட்சி வழங்கப் பட்டுள்ளது. வங்க முஸ்லிம்கள் கடும் உழைப்பளிகள். சிறந்த விவசாயிகள். அவர்கள் பிழைக்கத்தான் வந்தார்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் இன்னும் ஏழ்மை மிகு உழைப்பாளிகள்தான்.
மூர்க்கமான ஒரு அரசால் மூர்க்கமாகக் குடியுரிமை மறுக்கப்பட்டு இன்று திகைத்து நிற்கும் இம் மக்களுக்கு எங்கு போவது என இன்று தெரியாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர். இதில் வேதனை மிகு நகைச்சுவை என்னவெனில் இவர்களை இன்று இந்தக் கதிக்கு ஆளாக்கி இருக்கும் இந்த அரசிற்கும் இவர்களை என்ன செவது என்று தெரியாததுதான்.
இப்படியான நிலை ஏற்பட்டதற்கு பா.ஜ.க மட்டுமே காரணம் என நாம் சொல்ல முடியாது. நாங்கள் அங்கு சென்றபோது போடோ பழங்குடியினர் பெரும் தாக்குதலை அவர்கள் மீது நிகழ்த்தி இருந்தனர். ஒரு கல்லூரிப் பேராசிரியரின் முகவரி எனக்குக் கிடைத்திருந்தது. தலைநகரில் உள்ள ஒரு பல்கலைக் கழகமா இல்லை அரசு கல்லூரியா என எனக்கு நினைவில்லை. அங்கு வரைச் சந்தித்தோம். இளைஞர்தான். புன்னகையோடு வரவேற்றார். நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என அறிந்தவுடன் அவர் பொங்கிச் சினந்தது எனக்கு இன்றும் நினைவுக்கு வருகிறது.
அஸ்ஸாமியர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அவர்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இந்த முஸ்லிம் உழைப்பாளிகள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்படும் நிலை எவ்வாறு நிகழ்ந்தது? எங்கு, யார் தவறு செய்தார்கள்?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவின் முக்கிய அரசியல் ஆளுமைகள் என ஒரு பட்டியலிட்டால் உறுதியாக அதில் லோகியா வுக்கு அதில் ஒரு இடமுண்டு..
அவர் குறித்துச் சென்ற ஆண்டு எழுதிய பதிவு ஒன்றுடன் முடித்துக் கொள்வோம்,
######
லோகியாவைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் காந்தியைச் சந்தித்து நான்கு கோரிக்கைகளை அவர் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவை:
1) cancellation of all past investments by one country in another (2) unobstructed passage and the right of settlement to everybody all over the world (3) political freedom of all peoples and nations of the world and constituent assemblies and (4) some kind of world citizenship.
1.ஒரு நாடு இன்னொரு நாட்டில் செய்துள்ள மூலதனங்கள் உலகெங்கும் ரத்து செய்யப்பட வேண்டும்
2. யார் வேண்டுமானாலும் எங்கும் தடையின்றிச் செல்லலாம்; எங்கும் குடியேறலாம்.
3. எல்லா மக்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் அரசியல் சுதந்திரம்.
4. ஏதோ ஒரு வகையிலான உலகக் குடியுரிமை.
உலகக் குடியுரிமை... ஆகா... உலகக் குடியுரிமை..... கனவுகளில் வாழ்ந்தவர்கள்.