facebook-round

img

ஆடுகிறது பார் டிரம்ப் சர்க்கார்!

ஹவ்டி மோடி கண்காட்சி முடிந்தவுடன் டிரம்புக்கு பிரச்சினை தொடங்கி விட்டது. அடுத்த வருடம் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பிருக்கும் ஜோ பிடனைக் குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரெய்ன் நாட்டு அரசுக்கு தொலைபேசியில் அழைத்து அழுத்தம் கொடுத்ததாக டிரம்ப் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜோ பிடனின் மகன் ஹண்டர் உக்ரெய்னில் எரிவாயு காண்டிரக்ட் எடுத்திருக்கிறார். பிடனைக் குறித்து உக்ரெய்ன் அதிபருடன் பேசியதாக டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். உக்ரெய்ன் அதிபர் பிடன் மீது விசாரணை நடத்தாவிடில் அமெரிக்கா உக்ரெய்னுக்கு வழங்கவிருந்த 400 மில்லிய டாலர் உதவியை நிறுத்தி வைக்கும் என்று ‘மிரட்டியதாகவும்” டிரம்ப் மீது குற்றச்சாட்டு. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னணியில் இருக்கும் பிடனின் பெயரை நாசம் செய்வதே டிரம்பின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டிரம்பை இம்பீச் (கண்டனம்) செய்வதற்கான விசாரணைக்கு அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி உத்தரவிட்டுள்ளார். 

“அதிபர் பதவியேற்பின் போது எடுத்த உறுதிமொழிக்கு துரோகம், நம் தேசப் பாதுகாப்பிற்கு துரோகம், நம் தேர்தல்களின் நேர்மைக்கு துரோகம் என குடியரசுத் தலைவர் பதவியினை இழிவுபடுத்தும் செயல்களில் டிரம்ப் ஈடுபட்டார்,” என்று நான்சி பெலோசி குற்றம் சாட்டியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் டிரம்ப் பதவி விலக வேண்டும்.
ஹவ் டீ டிரம்ப்?
 

- விஜயசங்கர் ராமச்சந்திரன்