election-2019

img

4 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு


தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் காலியாக இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளில் மே மாதம் 19ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுதே மேற்கண்ட நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை இணைத்து நடத்த வேண்டுமென மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வற்புறுத்தின. ஆனால் ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் உடனடியாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் வாக்குமூலம் தாக்கல் செய்தது. இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் திமுகவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் தற்போது நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்டப்படி நடத்த வேண்டிய தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி தான் தேர்தல் நடத்த வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெறவுள்ள ஏப்ரல் 18ந் தேதியே நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தியிருந்தால், தற்போது தனியாக தேர்தல் நடத்துவதால் ஏற்படும் சுமார் ரூ. 500 கோடி தேர்தல் செலவை தமிழக அரசு மிச்சப்படுத்தியிருக்க முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

 

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் சேர்த்து 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று, மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து, திமுக வேட்பாளர்கள் அபரிமிதான வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும், திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படுவதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

;