election-2019

தேர்தல் ஆணையத்தை கலைக்கும் சட்டவழிமுறையை யோசிக்க வேண்டும்

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா என்பவர் தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையைத் தவறிவிட்டது. ஆளும் கட்சி சார்ந்து செயல்படுகின்றது என்று எதிர்க் கட்சிகள் மட்டும் தான் விமர்சனம் செய்துவந்தோம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையரே பகிரங்கமாகப் புகார் சொல்லியிருப்பது மோடி அரசு அரசியல் சட்டத்திற்குட்பட்ட பல நிறுவனங்களை சீர் குலைத்திருப்பதின் இறுதி உதாரணமாகும். சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைத்ததுபோல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டையும் மோடி அரசு முடமாக்கியுள்ளது கண்டனத்திற்குரியது.மோடி, அமித்ஷா ஆகியோர் வரம்பு மீறிப் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டத்திற்குரியது. இத்தகைய ஆணையத்தின் பிடியில் தேர்தல் நடந்திருப்பது அச்சத்தையும் பல்வேறு ஐயப்பாடுகளையும் எழுப்புகிறது. இந்த ஆணையத்தைக் கலைப்பதற்கு சட்டரீதியான வழிமுறைகள் இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். மக்களவைக்கு நடைபெற்ற ஏழுகட்ட வாக்குப் பதிவுகளைப் பார்க்கின்ற போது மோடியின் வரம்பு மீறிய பேச்சு, அமித்ஷாவின் வரம்பு மீறிய செயல்பாடுகள் ஆகியவற்றை மீறி மக்கள் விரோத பாஜக ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்குப்பதிவைச் செய்திருப்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகளுக்கு நாடு முழுவதும் மகத்தான வெற்றி கிடைக்கும் எனச் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.ஆட்சி மாற்றம் தமிழகத்தில் இறுதிக் கட்டமாக நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏராளமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதற்கு எந்த வரைமுறையும் கிடையாது போலும். மத்திய தேர்தல் ஆணையம் எப்படி வரம்பு மீறிச் செயல்படுகின்றதோ அதேபோன்று மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி செயல்படுகிறார். பண விநியோகத்தையும் மீறி தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெறும். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். மே 23 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.கே.பாலகிருஷ்ணன் பேட்டியிலிருந்து