மதுரை, ஜூன் 21 - தனியார் பள்ளிகளில் 2018-2021 ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட கல்விக்கட்டணத்தை வெளியிட அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கிம், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்தது. இதையடுத்து 2018-2021ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்யவில்லை.
இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் 7600 தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் 2018-2019 ஆண்டில் அரசு நிர்ணயம் செய்ய கல்விக்கட்டணத்தை விட அதிக மாக வசூலித்து வருகின்றனர். ஆகையால் 2018-2021 ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை வெளியிடுமாறு தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளியன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது 2018-21 ஆம் ஆண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டண விபரத்தை வெளியிட 3 மாத கால அவகாசம் கோரினர். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு மாத கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தனர்.