economics

img

கரூர் வைஸ்யா வங்கியின் புதிய தலைவராக மீனா தேர்வு

தமிழ்நாட்டின் தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் பகுதி நேர தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாகி மீனா ஹேமச்சந்திராவை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

மே மாதம், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாகமற்ற சுயாதீன தலைவர் பதவிக்கு (non-executive independent) மீனா ஹேமச்சந்திராவை நியமிப்பதற்கான ஒப்புதலுக்காக வங்கி நிர்வாகம், ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரைத்தது.

இந்நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 11, 2022 தேதியிட்ட கடிதத்தில், மீனா ஹேமச்சந்திராவை வங்கியின் பகுதிநேர தலைவராக, அதாவது சேர்மன் ஆக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது எனக் கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

64 வயதாகும் மீனா ஹேமச்சந்திரா-வின் பதவிக்காலம், பொறுப்பேற்ற நாளிலிருந்து 3 வருட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டர் மீனா ஹேமச்சந்திரா.

ரிசர்வ் வங்கி ஜூன் 2015 முதல் நவம்பர் 2017 வரை ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக மீனா ஹேமச்சந்திரா இருந்துள்ளார். இவரின் வருகை மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாகம் மேம்படுவது மட்டும் அல்லாமல், புதிய வர்த்தகப் பிரிவில் இறங்க பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

கரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.63 சதவிகிதம் சரிந்து ரூ.47.40 ஆக வர்த்தகமானது. 2022 ஆம் ஆண்டில் இவ்வங்கியின் பங்கு விலை வெறும் 1.62 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் 59.36 சதவிகிதம் சரிந்துள்ளது.

;