செங்கல்பட்டு, நவ.3- சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில் வந்தது. அந்த ரயில் 4-வது நடைமேடையில் நின்றதும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது பெண்கள் பயணம் செய்யும் ரெயில் பெட்டியில் ஒரு கட்டைப்பை கேட்பாரற்று கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பையில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த கட்டைப்பையில் பார்த்த போது பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதை கண்டனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையி னருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. பெண்கள் பெட்டியில் பயணம் செய்தபோது யாரோ குழந்தையை கட்டைப்பையில் வைத்து சென்று இருப்பது தெரிந்தது. பெண் குழந்தை என்பதால் அவர் விட்டுச் சென்றாரா? அல்லது அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தை இருந்த கட்டைப்பையுடன் வந்த பெண் பயணி குறித்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.