செங்கல்பட்டு, ஏப். 11- ஊழியர் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூட்டுறவு துணை பதிவாளர் உமதேவியை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திங்க ளன்று (ஏப்,10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு அழகேசன் நகர் பகுதியில் கூட்டுறவுத்துறை கீழ் செயல்படும் வீட்டுவசதி துறையின் துணைப்பதிவாளராக உமாதேவி என்பவர் பணியாற்றி வருகிறார். அலுவலக பணி யாளர்களை தரக்குறைவாக பேசி வருவ தாக ஊழியர்களும் அதிகாரிகளும் புகார் தெரிவித்தனர். உமாதேவியால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தலைமை செயலகத்தில் உமாதேவி மீது புகார் அளித்தனர். புகாரின் மீது அரசுத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய போராட்டம் திங்களன்று (ஏப்ரல் 10) நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதி யாக செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு துறை அலுவலகத்தின் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைப் பதிவாளர் உமாதேவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். கூட்டுறவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராம சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில செயலாளர் பேபி, கருவூல கணக்கு துறை அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் வி. லெனின், நகராட்சி மற்றும் மாநகரட்சி அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் தாமோதரன், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பூங்குழலி, கூட்டுறவு ஊழியர் சங்க செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் மகேந்திர பாபு, வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விக்டர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பேசினர்.