districts

img

வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதால் குவியும் வெளிநாட்டு பறவைகள்

செங்கல்பட்டு, டிச.12-    வேடந்தாங்கல் ஏரி முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் வெளி நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் தற்போது முகாமிட்டுள்ளன.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி, முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் பாகிஸ்தான், பர்மா, இலங்கை, சைபீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வர்ண நாரை வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம் உள்ளிட்ட 26 வகையான 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் பறவைகள் காண்பதற்காக வெளிநாட்டினர் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலத்திற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன மேலும் ஏரி நிரம்பியுள்ளதால் பறவைகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது