வேலூர், டிச. 31- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பதிக்கு 354 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் சென்னை மற்றும் வேலூரில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்பட உள்ளது. இதற்காக கூடுதலாக போக்குவரத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருமலையில் உள்ள ராம் பகிதா விடுதி வளாகம், பாலாஜி பேருந்து நிலையங்களில் கூடுதலாக மேலாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பயணிகள் எளிதில் டிக்கெட் பெறும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் வைகுண்ட ஏகாதசி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வரை இயக்கப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அதற்கு ஏற்ப பஸ்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.