வேலூர், மே 21- வேலூர் ஆப்காவில் பயிற்சி முடித்த சிறைத்துறை அதிகாரி விருது வாங்க மறுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள், சிறை காவலர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறைத்துறை அதிகாரிகளுக்கான 27ஆவது பேட்ஜ் பிரிவு 9 மாதகால அடிப்படை பயிற்சிகள் நடைபெற்றது. தில்லி, அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, கேரள, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது. அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஆப்கா இயக்குநர் சந்திர சேகர் தலைமையில் நடைபெற்றது. தெலுங்கானா மாநில சிறைத்துறை தலைவரும், ஏ.டி.ஜி.பியுமான ஜிதேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பயிற்சி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் சிறந்த ஆல்ரவுண்டராக தில்லி சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் அனுஜ் தேர்வு செய்யப்பட்டார். இது போன்று 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தில்லியை சேர்ந்த மாநில சிறைத்துறை துணை கண்காணி ப்பாளர் சுர்பி ஹோடா தனக்கு வழங்கப்பட்ட சிறந்த பயிற்சி விருதை வாங்க மறுத்துவிட்டார். தாம்தான் ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என அதிகாரிகளிடம் கூறிவிட்டு விருதை வாங்க மறுத்து திரும்பிச் சென்றார். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஜித்தேந்தர் பேசுகையில், சவால்கள் நிறைந்தது சிறை நிர்வாகம் என்று அனைவருக்கும் தெரியும். நீங்கள் இந்த சவாலை சாதாரணமாக ஏற்றுகொண்டால் வெற்றி பெறலாம். சிறையில் இருக்கும் அனைவரும் இந்த சமுகத்தினால் குற்றவாளிகளாக பார்க்கபடுகின்றனர். ஆனால் சிறையிலிருந்து கைதிகள் விடுதலை யாகி வெளியில் செல்லும் போது சமூகம் அவர்களை ஏற்றுகொள்ளும் வகையில் மாற்ற வேண்டும் என்றார். சிறைதுறையினருக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறையில் கைதிகளுக்கு மனநிலை சார்ந்த பயிற்சிகளும், பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆதரவோடு தொழிற்பயிற்சிகளும் வழங்கப் படுகிறது என்றும் கூறினார். தெலுங்கானாவில் சிறை மேம்பாடு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் மூலம் கைதிகள் தொழில் திறனை மேம்படுத்த சர்வதேச தொழில் நிறுவனங்களுடன் தெலுங்கானா சிறை நிர்வாகமும் அரசும் ரூ.200 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் தில்லி கண்கா ணிப்பாளர் தேவேந்திர குமார், வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.