வேலூர், அக்.11- தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி சாரா கல்வி இயக்கம், வயது வந்தோருக்கான கல்வி திட்டம், புதிய எழுத்தறிவு திட்டம் துவக்க விழா காட்பாடியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்தார். இத்துறையின் விழிப்புணர்வு பாடலை பாடிய பள்ளி மாணவிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் தற்போது வயது வந்தோர் கல்வி திட்டத்தில் 50 லட்சம் பேர் எழுத்தறிவு எண்ணறிவில்லாமல் உள்ளனர். வரும் 5 ஆண்டுக்குள் 25 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் எழுத்தறிவு அளிக்கப்பட திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது” என்றார். வேலூர் மாவட்டத்தில் 10820 பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.9.83 கோடி செலவில் தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இந்த ஆண்டு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு மக்களிடமும் நல்ல ஆதரவு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விழாவில் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார்,ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கல்வித்துறை இயக்குநர் பெ.குப்புசாமி, இணை இயக்குநர் கே.சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.