districts

img

இரண்டுமாத கன்று குட்டிக்கு அரிய வகை அறுவை சிகிச்சை கால்நடை மருத்துவர்கள் சாதனை

வேலூர். ஜன 12 - வேலூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவ ருடைய இரண்டு மாத கன்று குட்டி பிறவி குறைபாடு காரணமாக தொப்புள் கொடி பகுதியில் ஒரு பெரிய கட்டியுடன் பிறந்ததிலிருந்தே கழிவுகள் ஆசன வாய் வழியாக வெளிவராமல் தொப்புள்கொடி வழியாக வெளியேறி சரியாக உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது. கால்நடை மருத்துவர்களுக்கு பெரு மாள் தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த அதனை பரிசோதித்துப் பார்த்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் வயிற்றுப் பகுதியை திறந்து பார்த்தால் தான் என்ன பிரச்சனை என்று அறிய முடியும் என்று தெரிவித்தார். பின்னர் வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் மரு. ரவிசங்கர் மற்றும் மரு. சுப்பிரமணியன் ஆகியோர் கன்றுகுட்டிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். குடல் பகுதி சீராக இல்லை என்பதும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையாமல் இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குடல் பகுதியும் ஒன்றாக இணைத்தனர், வெளியில் இருந்த சுமார் ஒரு கிலோ எடையுள்ள கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கன்று குட்டி  உடல் நிலை தேறி ஆசனவாய் வழியாக சாணத்தை வெளியேற்றியது. இந்த அரிய வகை பிறவி குறைபாடு நோயினை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் கன்று குட்டிக்கு  வேலூர் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளது சாதனையாக கருதப்படுகிறது.