districts

img

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியின்றி மாற்றுத்திறனாளிகள் அவதி

விருதுநகர், பிப்.10- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர், கழிப்பிடம், சக்கர நாற்காலி ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மாற்றுத் திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு  புதன்கிழமை தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அடையாள அட்டை பெறுதல், அடையாள அட்டைகளை புதுப்பித்தல், பேருந்து பயண அட்டை, ரயில் பயண அட்டை ஆகியவற்றை பெற்றிட மாவட்டம் முழுவதுமிருந்து சராசரியாக 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வருகின்றனர். மருத்துமனையில் தெற்கு பகுதியில் உள்ள அலுவலகத்தில் எலும்பு மற்றும் நரம்பியல் மருத்துவர்களும், வடக்கு  பகுதி  கட்டிடத்தில் உள்ள 2வது மாடியில் கண், காது மருத்துவர்களும் உள்ளனர். இவர்களை பரிசோதித்து மருத்துவர்கள், உடலில் உள்ள உறுப்புகளின் பாதிப்பிற்கு ஏற்ப ஊனத்தின் அளவை நிர்ணயம் செய்கின்றனர்.   இங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. மேலும், கழிப்பிட வசதியும் இல்லை. இதைவிட கொடுமை என்னவெனில், இங்கு சக்கர நாற்காலிகள் இல்லை. இதன் காரணமாக,    நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளை அவர்களது உறவினர்கள் சுமந்து சென்று மருத்துவரிடம் காண்பிக்கும் நிலை உள்ளது. மேலும்  நரம்பியல் மருத்துவர்கள் சரிவர இந்த முகாமிற்கு வருவதில்லையெனவும் மாற்றுத்திறனாகிள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் நடராஜன் கூறுகையில்,  கொரோனா காலத்தில் முகாம் நடைபெறும் நாட்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்றைய தினமே அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. தற்போது, புதன் கிழமை மருத்துவமனைக்கு மாற்றுத் திறனாளிகள் வந்து மருத்துவரை பார்க்க வேண்டும். பின்பு, 10 நாட்கள் கழித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தான் அடையாள அட்டை பெற வேண்டும். இதனால், மாற்றுத் திறனாளிகள் தேவையற்ற அலைக்கழிப்புக்கும், கூடுதல் பணச் செலவு செய்யும் நிலையும் ஏற்படுகிறது. மேலும்,அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இரு இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனால், மாற்றுத்திறனாளிகள் வீண் அலைச்சலின்றி அடையாள அட்டைகளையும் தேவையான உதவிகளையும் எளிதில் பெற்றுச் செல்கின்றனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டுமே முகாம் நடைபெறுகிறது. எனவே, கோட்டத்திற்கு ஒரு இடத்தில் முகாம் ஏற்பாடு செய்திட வேண்டும் என தெரிவித்தார். மாற்றுத்திறனாகிள் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு கோட்ட அளவில் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் அந்த உத்தரவு அமலாகவில்லை. மேலும், பேருந்து பயண அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகள், சம்மந்தப்பட்ட ( காது, கண், எலும்பு, நரம்பியல் மருத்துவர்) மருத்துவர்  மீண்டும் உடல் பரிசோதனை செய்த பின்பே பயண அட்டை வழங்கப்படுகிறது.

மேலும், மருத்துவரை பார்க்க  நுழைவுச் சீட்டும் பெற வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அதேவேளை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரிடமே பயண அட்டைக்கு கையொப்பம் பெறலாம் என உத்தரவு உள்ளது. ஆனால், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் பகுதியில் குடிநீர், கழிப்பிடம், சக்கர நாற்காலி ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த காலங்களைப்போல உடனடியாக அடையாள அட்டை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.