விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் குமிழ் வடிவ தங்க அணிகலன் மற்றும் தங்க பட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டையில் 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி மற்றும் தக்கலி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது, 2 கிராம் எடையுள்ள தங்க பட்டையும், 2.2 கிராம் அளவிலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்து வந்த பண்டைய கால மனிதர்கள் கலைநயமிக்க தங்க அணிகலன்களை உருவாக்குவதோடு, அதை அணிந்து நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் எனத் தெரிய வந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 2-ஆம் கட்ட அகழாய்விலும் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.