தேனி ,ஜூன்.16- போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ஏ.சி.எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை பயணிகள் ரயில் சேவையை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வியாழனன்று இரவு தொடங்கி வைத்தார். மதுரை-போடி-இடையே இயங்கிய மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப் பட்டது. முதற்கட்டமாக தேனி வரை பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து தேனிவரை இருமார்க்கமாக பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
12ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 15-ம் தேதி முதல் போடியில் இருந்து மதுரைக்கும், சென்னைக் கும் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி வியாழனன்று இரவு போடி ரயில் நிலையத்தில் இதற்கான தொடக்கவிழா நடை பெற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்க, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் முன்னிலை வகித்தார்.ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். மதுரை தினசரி ரயிலைப் பொறுத்தளவில் (06701) காலை 8.20மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பி 10.30மணிக்கு போடிக்கு வந்தடைகிறது. மீண்டும் மாலை 5.50க்கு கிளம்பும் இந்த ரயில் (06702) 7.50 மணிக்கு மதுரைக்குச் சென்றடைகிறது. இதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரயில்(20601) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 7.15மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9.35மணிக்கு போடியை வந்தடைகிறது. மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8.30மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7.55க்கு சென்னைக்கு சென்றடைகிறது. போடிக்காக பொதுப்பெட்டிகள் இணைப்பு ஏ.சி.எக்ஸ்பிரஸ் முன்பதிவு ரயிலாகவே சென் னையில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்டு வந்தது. போடிக்கு இந்த ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதன் மூலம் முன்பதிவு செய்யாமல் சென்னை செல்லும் வசதி தேனி மாவட்ட மக்களுக்குக் கிடைத்துள்ளது.