(தொகையறா)
பிச்சை வாங்கிப் பிழைப்பவனுக்கும்
பிச்சை ஏதோ கொஞ்சம் தினம் கிடைக்கும்!
விவசாயக் கூலி வேலையாளுக்கு
வேலை எங்கே தம்பி தினம் கிடைக்கும்?
வாங்கும் கூலியை திருவோட்டுப் பிச்சை முன்
வைத்துப் பார்த்தாக்க என்ன தெரியும்?
கூலியை விடவும் திருவோட்டுப் பிச்சை
கூடுதல் என்று சொல்லத் தெரியும்!
(பாட்டு)
அடி மாடு -அய்யா - அடி மாடு
விவசாயக் கூலி கசாப்புக்குப் போகும்
அடிமாடு -ஐயா- அடிமாடு!
தடிமாடு -ஐயா -தடிமாடு!
கூலிக்காரனுக்குக் குல்லா போடுறவன்
தடிமாடு -ஐயா- தடிமாடு!
(அடிமாடு)
பூமியில் உண்டோ இவனைப் போல பலியாடு?
புள்ளக் குட்டிகள் உடம்ப பார்த்தா கருவாடு!
நிலம் இல்லாத கூலி உழவனின் நிலையோடு
படகில்லாத துடுப்பைச் சொல்லலாம் துயரோடு!
நாடா- இது - நாடா?
இல்லை இல்லை சுடுகாடு!
கூலி - விவ-சாயி
சாய்ந்தான் சாய்ந்தான் அடியோடு!
அவன் வெறும் கூடு! (அடிமாடு)
உழவர்களுக்கே உபரி நிலத்தை பங்கிடணும்!
உப்பிப் பெருத்த பண்ணையார்
தொந்தி கரைந்திடணும்!
இடுப்பில் கட்ட துணிமணி
வேட்டி கிடைத்திடணும்!-அதை
ஈரத்துணியாய் வயிற்றில்
கட்டாத நிலை வரணும்!
கண்ணை -போன்ற -மண்ணில்
காலா காலம் மழை வரணும்!
ஓட்டை -குடிசை - உள்ளே
அரசே ஏன் ஏன்மழை வரணும்?”
நல்ல வீடு தரணும்
(அடிமாடு)
– நவகவி