districts

img

‘பாகோடு பேரூராட்சி எங்களுக்கே’ சிபிஎம் வேட்பாளர்கள் பிரச்சாரம் விறுவிறுப்பு

பாகோடு (நாகர்கோவில்), பிப்.12- கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்தப் பேரூராட்சியில் 16 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றிமுகம் காட்டி வீர நடைபோட்டு வாக்குச் சேகரித்து வருகின்றனர். இரண்டு வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அவர்களும் கட்சியின் ஆதரவோடு பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாகோடு பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பொறுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கும் என மாற்றுக் கட்சியினர் கூறுகின்றனர். இந்தப் பேரூராட்சியில் ஊழலற்ற-நேர்மையான நிர்வாகத்தைத் தருவதுதான் எங்களது நோக்கம் என்கிறார் கட்சி வேட்பாளர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்புறம் வட்டாரச் செயலாளர் ஆர்.ஜெயராஜ்.  உங்களுடன் நீண்ட நேரம் பேசவேண்டும். ஆனால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக கூறுகின்றேன் என்றார். அவர் கூறியது இதுதான்:-  பேரூராட்சியில் ஊழற்ற-நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவோம்.

பாகோடு பேரூராட்சிப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்துவோம். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படும்.  குறிப்பாக சாலை மேலே சாலை போடுவது முற்றாக தடுக்கப்பட்டு, பழைய சாலையை தோண்டி  தரமான முறையில் சாலை அமைக்கப்படும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வழிப்பாதைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றுவோம். வீடில்லாத தகுதியான ஏழை மக்களுக்கு அரசின் இலவச வீடு பெற்றுத்தருவோம். தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும். பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்துவோம். கடந்த பத்தாண்டுகளாக பழுதடைந்துள்ள சாலைகள், வடிகால்கள் சீரமைக்கப்படும். பாகோடு பேரூராட்சியில் மக்கள் ஒற்றுமை,  சகோதரத்துவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேணிப் பாதுகாத்து  வருகிறது. வரும் காலங்களிலும் இந்தப் பணியை தொடர்ந்து செய்வோம். மத மோதல்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்றார்.