ஒல்லியான தேகம், குள்ளமான உரு வம். சாதாரண தோல் பதனிடும் தொழிலாளி ‘எஸ்.ஏ.டி.’ என்று ஒரு வித அதட்டலோடு, தன் தலைவனை அழைப்பார். தொழிலாளர்களால் உரிமையோடு நேசிக் கப்பட்டவர் எஸ்.ஏ.தங்கராஜன். ஒரு தலைவர் என்ற எண்ணம் இல்லாமல் அந்த தொழிலாளியோடு தோள் மீது கை போட்டுக்கொண்டு பேசிக்கொண்டே நடந்து செல்வார். மேல்சட்டை இல்லாமல் வெறும் உடலோடு நடந்து செல்லும் அந்த தோல் பதனி டும் தொழிலாளியின் பக்கத்தில் செல்ல முடி யாது. அந்த அளவிற்கு அவர் மீது படிந்தி ருக்கும் தோலின் துர்நாற்றம் வீசும். ஆனால் எஸ்.ஏ.டி.க்கு அதெல்லாம் பழகிப்போன ஒன்று. கிண்டலும் கேலியுமாக எல்லோரு டைய பேச்சையும் கோபப்படாமல் கேட்டு ரசிப்பார் எஸ்.ஏ.டி.
என்ன பேச்சு பேசினாலும் சிரித்துக் கொண்டே கேட்ட எஸ்.ஏ.டி. அனைவரிடமும் சந்தாவை பெற்றுக்கொண்டு சங்கத்தில் சேர்த்திடுவார். சுண்ணாம்புத்தண்ணீர் பட்டு பட்டு அந்த இடுப்பின் தோல் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கும். அந்த இடுப்பில் 10 சுருட்டு சுருட்டி வைத்துள்ள அந்த சில்லரைக் காசை சந்தா காசாக எடுத்து கொடுப்பார்கள். எஸ்.ஏ.டி. அந்த காசை வாங்கிக்கொள்வார். அந்த காசில் அந்த தொழிலாளியின் வியர்வையும், தோல் கழிவின் வாடையும் சேர்ந்து வீசும். அதை வாங்கிக்கொண்ட எஸ்.ஏ.டி. ஒரு புன்முறுவல் மட்டும் பூப்பார். தோழர்களே இன்று மாலை 5 மணிக்கு சங்கக்கூட்டம் இருக்கிறது; அனைவரும் வந்து சேர வேண்டும் என்று தகவலையும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்வார். சூரியன் மங்கிக்கொண்டு வரும் வேளை. இன்னும் ஒரு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று முதலாளி சொல்லுவார். ஆனால் அந்த தொழிலாளிகள் சங்கக் கூட்டத்திற்கு போக வேண்டும். எஸ்.ஏ.டி. நேரா வந்து சொன்னதை கேட்டீங்கள்ல என்று அந்த தொழிலாளி அவர்களுக்கு உரிய பாணியில் முதலாளியிடம் சொல்வார்கள். அந்த முதலாளிக்கு அவ்வளவு கோவம் வரும். இருந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டும் பேசாமல் இருந்து விடுவார்.மீறி பேசினால் அடுத்த நாள் வேலைக்கு வரமாட்டார்கள். ஷாப் முன்பாக கொடியை நட்டுவிடுவார்கள். அது வும் இந்த அத்தக்கூலிக்கு யாரும் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் பேசாமல் இருந்துவிடுவார்.
‘செங்கோட்டையில் செங்கொடி பறக்கும்’
மாலையில் சங்க அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழியும். தோழர் ஏ.பி., எஸ்.ஏ.டி.,என்.வி.பாக்கியநாதன் உள்ளிட்ட தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சைக்கிளில் வந்து இறங்குவார்கள். கூட்டத்தில் இருப்பவர்கள் ஒதுங்கி வழி விடுவார்கள். கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும் புகைபிடிக் கக்கூடியவர்கள். இதனால் அந்த அரங்கமே புகை மண்டலமாக காட்சி தரும். ஏ.பி, எஸ்.ஏ.டி., என்.வி ஆகியோருக்கு குமட்டல் வந்துவிடும் போல் இருக்கும். சமாளித்துக்கொள்ள நினைப்பார்கள். எஸ்.ஏ.டி. கூட்டத்தைப் பார்த்து, ‘அந்த கதவு ஜன்னல்களை திறங்கப்பா, ஒரே பீடிப்புகைமூட்டமா இருக்கி றது. ச்சே.. ‘என்று சலித்துக்கொள்வார். எஸ்.ஏ.டி. சொன்னவுடன் ஜன்னல்கள் திறக்கப்படும். ஓரளவு புகை குறைந்துவிடும். ஏ.பி. பேச துவங்கியதும் ரொம்ப சீரியசாக கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர் மீது பெரிய மரியாதை. அதற்கடுத்து என்.வி பேசும் போதும் அமைதி காப்பார்கள். கடைசியாக எஸ்.ஏ.டி. பேச துவங்குவார். சிறிது நேரம் தான் பேசுவார். அதற்குள் எல்லா பிரச்சனைகளையும் தொட்டுவிடுவார். தோல் தொழிலாளர்களின் பிரச்சனை களை எல்லாம் பேசி, கடைசியாக , “ நம்ம தோழர் சார்லசை ஷாப் முதலாளி அடிச்சுட்டார். ஏ.பியிடம் வந்து சொன்னபோது, திருப்பி அடிக்காமலா வந்தே என்று கேட்டதும் உடனே போய் அவனை புரட்டி எடுத்துட்டார் சார்லஸ். ஆடிப் போய் இருக்கானுங்க முதலாளிங்க. இந்த துணிச்சல், இந்த வீரம் ஒரு தொழி லாளிக்கு எங்கிருந்து வந்தது. எல்லாம் நமது சங்கம் கொடுத்தது ;இந்த செங்கொடி கொடுத்தது. எனவே தனி மனிதர்களால் எதை யும் சாதிக்க முடியாது. அவர்கள் சாதிக்க முடியாததை சங்கம் சாதிக்கும் இன்றில்லா விடடாலும் என்றாவது ஒரு நாள் சென்னை ஜார்ஜ் கோட்டையிலே, தில்லி செங்கோட்டை யிலே இந்த செங்கொடி வானுயர்ந்து பறக் கத்தான் போகிறது” என்று முழங்குவார் எஸ்.ஏ.டி. அரங்கத்தில் அடங்காத கரவொலி.
திசை மாற்றிய புத்தகம்
திண்டுக்கல்லில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த எஸ்.ஏ.தங்கராஜன் ,குடும்ப வறுமை காரணமாக சென்னைக்கு சென்று அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிக்க நேரிட்டது. அந்தபள்ளியில் உள்ள ஆசிரியர்களில் சிலர் பிராமணர்களாக இருந்தனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே பிராமண எதிர்ப்பு மனநிலை இருந்தது. எஸ்.ஏ.டியின் ஆசிரி யர் பெயர் ஞானசாமி. எஸ்.ஏ.டி.க்கு உறவி னரும் கூட. அவர் பெரியாரின் திராவிடர் கழ கத்தில் முக்கிய தலைவராக இருந்துள்ளார். அவர் எஸ்.ஏ.டி.யையும். இன்னொரு மாண வரான லூர்துசாமியையும் அழைத்துக் கொண்டு சிறு வயதிலேயே திராவிடர் கழக மேடையேற்றினார். இந்த இரண்டு சிறுவர் களும் மேடையேறியதும் கடவுள் இல்லை, கல்லை கடவுளாக கற்பிக்க வேண்டாம். எங்கும் எதிலும் பார்ப்பனீயம்; பார்ப்பனீய ஆதிக்கம் ஒழிக. என்று கோஷமிடுவார்கள். திராவிடர் கழக தோழர்கள் இந்த இரண்டு சிறுவர் களின் பேச்சில் உற்சாகமடைவார்கள். கட வுள் இல்லை என்ற சித்தாந்தத்தை கற்றுக் கொண்ட எஸ்.ஏ.டிக்கு.ஒரு சோதனை. அவ ரது தந்தை குரூஸ், திருச்சியில் உள்ள கத்தோ லிக்க மத போதகர்கள் பள்ளியில் சேர்த்து விட்டார். மிகவும் கட்டுப்பாடுகள் உடைய அந்த குருமார்கள் பள்ளியில் சேர்ந்த எஸ்.ஏ.டி. ஒரு நாள் திருச்சி கடைவீதிக்கு சென்ற போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தோழர், பி.இராமமூர்த்தி எழுதிய ‘மக்கள் வயிற்றில் அடிக்காதே’ என்ற புத்தகத்தை விற்றுக் கொண்டிருந்தார். அந்த புத்தகத்தை வாங்கி வந்து விடுதியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து படித்து வந்தார். அதைப் பார்த்த மற்றொரு மாணவன், சாமியாரிடம் சொல்லிவிட்டான். இதனையடுத்து எஸ்.ஏ.டி. யை குருமார்கள் பள்ளியிலிருந்து விடுவித்த னர்.
துடிப்பு மிக்க இளைஞன்
இதற்கிடையில் மீண்டும் எஸ்.ஏ.டி.யின் குடும்பம் திண்டுக்கல்லிலேயே குடியேறியது. ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்த எஸ்.ஏ.டி.க்கு திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் உருவாகக் காரணமான ஆசிரியர் தோழர் பாக்கியநாதனுடன் நட்பு ஏற்பட்டது. கம்யூனிசம் பற்றி கருத்துக்களை பாக்கியநாதன் எஸ்.ஏ.டி.யிடம் சொல்ல, திராவிட கழக கருத்துக்களைக் கொண்ட எஸ்.ஏ.டி. அவரிடம் இரவு நெடு நேரம் வரை விவாதிப்பார். இப்படி விவாதித்து விவாதித்து கம்யூனிஸ்டாக மாறினார் எஸ்.ஏ.தங்கராஜன். ஒரு நாள் கட்சி அலுவலகத்திற்கு சென்ற போது தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவரை கைகுலுக்கி வரவேற்று மற்ற தோழர்களிடம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடமிருந்து ஒரு துடிப்புமிக்க இளைஞர் நமக்கு கிடைத்துள் ளார் என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து கட்சியில் ஒரு ஊழியராக ஜனசக்தி பேப்பர் போடும் இளைஞராக, தொழிற்சங்க தலைவராக களமிறங்கினார்.
சிறைப்பறவையாக....
ஒரு கம்யூனிஸ்ட் என்றால் சிறை அனு பவங்கள் இல்லாமலா? ஆனால் எஸ்.ஏ.டி.க்கு சிறையே வீடாகும் அளவிற்கு தன் வாழ்நாளில் ஏராளமான நாட்கள் சிறையிலேயே கழித்துள்ளார். எட்டுமணி நேர வேலை, வார விடுமுறை, கூலிஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1948ம் ஆண்டு தோல்பதனிடும் தொழிலாளர் சங்கம் வேலைநிறுத்தம் பொது வேலைநிறுத்தமாக மாறியது. முதலாளிகளு டன் சேர்ந்து கொண்டு காவல்துறை வெறி யாட்டத்திற்கு தயாரானது. தோமையார்புரம், சவேரியார்பாளையம், அந்தோணியார்தெரு, லைன்தெரு, மார்க்கெட் தெரு, என திண்டுக் கல்லில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் எல்லாம் போர்க்களமாகின. ஆயுதப்படை போலீசார் இந்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர். தோழர்கள் என்.வரதராஜன், மதனகோபால் போன்றவர்கள் போராட்டங்களை திட்டமிட்டு கொடுத்தனர். 3 மாதம் வரை இந்த போராட்டம் நீடித்தது. ஆண்கள் யாரும் வீடுகளில் இல்லாமல் தலைமறைவானார்கள். 36 பெண்கள் உட்பட 296 பேர் கைது செய்யப் பட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைக்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். சிறையிலிருந்து விடு தலை செய்யப்பட்ட நாளன்று சிறைக்கு வெளியே கூடி நின்றவர்கள் மீது நூற்றுக்க ணக்கான போலீசார் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு தோழர் எஸ்.ஏ.டி. தலைமை தாங்கி நடத்தியதையடுத்து எஸ்.ஏ.டி. சின்னப்பன், அரசப்பன், பாஸ்டின், செல்ல துரை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். தோழர் எஸ்.ஏ.டிக்கு அது தான் முதல் சிறை அனுபவம். எஸ்.ஏ.டி. இளம் கம்யூனிஸ்ட் என்பதால் அவரை சிறு வர் சிறையில் அடைத்தனர். அவர் மீது 307 பிரிவான கொலை வழக்கு பதிந்திருந்தனர். அப்போது முதல் ,எண்ணற்ற வழக்குகள், பொய் வழக்குகள், கொடிய தாக்குதல்கள், சித்ர வதைகள்...என அந்த தலைவன் எதிர் கொண்ட கொடுமைகள்தான் எத்தனை எத்தனை.
செங்கொடியின் தலைவனாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினராக, துப்புரவு தொழிலா ளர்கள் பணியாற்றும் உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கத்தின் மாநில தலைவராகவும் செய லாற்றினார். திண்டுக்கல்லில் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் சேவையாற்றினார். ஜனவரி 13 ஆம் தேதி காலமானார் தோழர் எஸ்.ஏ.தங்கராஜன். அவரது மறைவு செய்தி யறிந்து திண்டுக்கல் நகரமே சோகத்தில் ஆழ்ந்தியது. அவரது உடல் பாறைப்பட்டியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவரது கொள்கை, லட்சியத்தை இளைய தலை முறைக்கு எடுத்துச்செல்வது நம் ஒவ்வொரு வரின் கடமை.
-இலமு, திண்டுக்கல்