ஒட்டன்சத்திரம் ஏப்.16- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் இருந்து குடிநீர் தினந்தோறும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் மூலமாக 2 நாட்களுக்கு ஒருமுறை மேற்கு தெருவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பழைய நீர்த்தேக்கதொட்டி சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது.இதன் அருகே கோவில், ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஆபத்தான முறையில் இருந்ததால் மகாமாரியம்மன் கோவில் அருகே ரூ 35 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்ததொட்டி கட்டப்பட்டு கடந்த மாதம் திறப்பு விழா நடந்தது. ஆனால் ஆபத்தான முறையில் உள்ள மேல்நிலை நீர்த்ததேக்கதொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆபத்தான முறையில் உள்ள பழைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க அகற்றிவிட்டு புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் மூலமாக சீரான குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கதிரவன் கூறுகையில், இடையக்கோட்டையில் மேற்குப்பகுதிக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது தெரியாததால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் முழுமையாக பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு தினந்தோறும் காலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.