இராஜபாளையம், ஆக.6- இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தாமிரபரணி குடிநீர் சோதனை ஓட்டத்திற்காக திறந்து விடப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இதில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி பல மணி நேரம் செல்லும் நிலை தினசரி கட்சியாக இராஜபாளையம் நகர் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி 60 அடி ரோட்டில் முத்து மாரியம்மன் கோவில் எதிர்ப்புறம் தாமிரபரணி தண்ணீர் பாதாள சாக்கடை தொட்டி வழியாக சென்று கொண்டே இருந்தது. தண்ணீர் ஆற்றில் இருந்து வெளியே வருவது போல் கழிவு நீர் கால்வாயில் கலந்து கொண்டே இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். ஆனால் சரி செய்யவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்பகுதிக்கு நேரடியாக சென்று அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாலையின் ஒரு புறம் சென்று கொண்டிருந்த தண்ணீர் சாலையின் மறு புறம் வழியாக வந்தது. சில நிமிடங்களிலேயே அந்தச் சாலை ஓரடி உயரத்திற்கு மேலே எழும்பி ஒரு கனரக வாகனம் சென்றவுடன் சாலை இரண்டாக பிளந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் அவ்விடத்தில் திரள ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் காவல் துறையினரும் நகராட்சி உதவி பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தாமிரபரணி தண்ணீர் நிறுத்தப்பட்டது. தாமிரபரணி குடிநீர் திட்ட பணியாளர்கள் வருகை தந்து இதை உடனடியாக சரி செய்யச் சொல்கிறோம் என உறுதி அளித்தனர். சாலையையும் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் கட்சியின் நகரச் செயலாளர் மாரியப்பன், நகர்க் குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுப்பிரமணியன், பிரசாந்த், செந்தமிழ் செல்வன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் கடந்த மூன்று முறை தண்ணீர் வரும் போது மலையடிப்பட்டி பகுதி முழுவதும் சாக்கடை கலந்த நீர் வருவதாக புகார் அளித்தனர். தண்ணீர் கலங்கலாக வருவதால் சாக்கடை நீர் கலந்திருக்கும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் இதனை முறையாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.