விருதுநகர், அக்.28- விருதுநகர் பொது மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக் குட்டம் அணையில் உள்ள பெரும்பாலான கதவணைகளிலும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்காமல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விருதுநகர் நகராட்சி பகுதியில் வசித்து வரும் சுமார் 1 லட்சம் பொது மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது ஆணைக்குட்டம் அணை யாகும். இங்கிருந்து திருத்தங்கல் பகுதிக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பட்டு வருகிறது. இந்த அணையானது, கடந்த 1989 ம் ஆண்டு அப்போதைய முதல மைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் மட்டம் 7.5 மீட்டராகும். இங்கு தேக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் இந்த அணையானது கட்டப் பட்டுள்ளது. மேலும், அணையிலிருந்து சுமார் 500 மீ தொலைவில் அர்ஜூனா ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்தும், ஆற்றின் கரையோரம் உள்ள 13 கிணறு கள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு விருதுநகர் நகராட்சி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் சிவகாசி பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ஆணைக்குட்டம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஓரிரு நாளில் சுமார் 4 மீட்டர் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால், அணையில் உள்ள 9 கதவணைகளில் இரண்டைத் தவிர ஏழு கதவணைகளிலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறியுள்ளது. தொடர்ந்து ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதால் தற்போது தண்ணீரின் அள வானது 2 மீட்டராக குறைந்து விட்டது. யாருக்கும் பயனின்றி குடிநீரானது வீணாக ஆற்றின் வழியாக செல்கிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஓரிரு தினங்களில் அணையில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேறி விடும். மீண்டும் அணையானது, காய்ந்த நிலையிலேயே காணப்படும்.
ஆனால், இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளோ எவ்வித அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறை அணைக்கு தண்ணீர் வரும் போதும், அது ஷட்டர் வழியாக வெளியேறுவது வாடிக்கையாகி விட்டது. பின்பு, பொது மக்கள் மறியல் போராட்டம் நடத்திய பிறகே தூத்துக்குடியிலிருந்து முத்து குளிக்கும் தொழிலாளர்களை வரவழைத்து அடைக்கும் பணிநடைபெறும். இதுகுறித்து நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகை யில், சமீபத்தில் பெய்த மழையால் அணையில் 4 மீட்டர் வரை தண்ணீர் இருந் தது. ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறாமல் இருந்திருந்தால், 6 முதல் 8 மாதங்கள் வரை விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீரை வழங்க முடியும் என தெரிவித்தார். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக ஆணைக் குட்டம் அணையை நேரில் சென்று பார்வையிட்டு அணையிலிருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.