ஒட்டன்சத்திரம், ஏப்.2- ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சின்ன குளம் நடை பார்க் திறப்பு விழா செய்வதற்கு முன்பே பேவர் பிளாக் சாலை சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நக ராட்சிக்கு உட்பட்ட 4 ஆவது வார்டு பகுதியில் உள்ளது சின்னகுளம். இந்த குளத்தில் ஒட்டன்சத்திரம் நகரில் உள்ள அனைத்து கழிவுநீர்களும் கலக்கின்றன. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தமிழக அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவில் புதிய பார்க் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டு சுமார் ஆறு மாதம் காலம் ஆகிவிட்டது. இன்னும் திறப்பு விழா காணாமலே உள்ளது ஆனால் இந்த பார்க்கில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை முற்றிலும் சேதம் அடைந்து சிமெண்ட் கலவை கள் கைகளால் தள்ளினால் தானாக வருவது போல மேல் பூச்சு மட்டும் பூசப்பட்டுள்ளது. எனவே ஒட்டன் சத்திரம் நகராட்சி நிர்வாகம் அரசு பணத்தை வீண் விரையம் செய்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திறப்பு விழா காண்பதற்கு முன்பு சேதமடைந்த பேவர் பிளாக் கற்கள் சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இது குறித்து நகராட்சி பொறுப்பு ஆணை யாளர் சக்திவேல் இடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இதுகுறித்து பதில் அளிக்க மறுத்து விட்டார்.