மதுரை, மார்ச் 31- மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த அருப்புக்கோட்டை யைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 50) என்பவர் மாரடைப்பால் மார்ச் 31 வெள்ளியன்று அலுவலகத்திலே காலமானார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா கூறுகையில் , “கருவூலத்துறையின் ஐஎப்எச்ஆர்எம்எஸ் (IFHRMS) சர்வர் சரிவர இயங்காததால் ஏற்பட்ட மன உளைச்சல், காலிப்பணியிடங்களால் கூடுதல் பணிப்பளு ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாண்டு கடைசி 3 நாட்களுக்குள் திட்டத்திற்காக லட்சக்கணக்கில் நிதியை ஒதுக்கி பணியை செய்து முடிக்க நிர்ப்பந்தித்து நிதி நிலையை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தத்தாலும் பணிச்சுமை காரணமாகவே தற்போது சண்முகவேல் இரவு முழுவதும் வேலை செய்ய நேரிட்டு அவர் உயிர் இழக்க நேரிட்டது. இதற்கு முழு பொறுப்பும் தமிழ்நாடு அரசும் வேளாண்மைத் துறையுமே ஆகும். தமிழ்நாடு முதல்வர் நிவாரணமாக 1கோடி ரூபாயும் நிபந்தனையற்ற முறையில் கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் மாவட்ட இணைச் செயலாளர், மு.ராம்தாஸ், வட்டக்கிளை செயலாளர்கள் சு.பழனிவேல், செ.ஞானபபிரகாசம், மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்க செயலாளர் கே.கண்ணன், பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன், துணைத்தலைவர் துரைராஜ், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சுகுமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.