மதுரை,ஏப்.23- மதுரையில் அனைத்துத்தரப்பு மக்களும் பங்கேற்கும் சித்திரை திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதியன்று தொடங்கியது. மாசி வீதிகளில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 22 திங்களன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்று முடிந்தது.
அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு தங்கப்பல்லக்கில் ஞாயிறன்று மதுரை நோக்கி புறப்பட்டு வந்தார். திங்களன்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23 செவ்வாயன்று காலை நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பண சாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் மலர்களால் நிரப்பப்பட்டிருந்த வைகை யாற்றுப் பகுதியில் கள்ளழகர் இறங்கினார். இந்நிகழ்வில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட னர்.
மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்தவர்கள் காணவந்ததால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது. இந்நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் பலத்த காவல்துறை யினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வைகையாற்றைச் சுற்றிலும், தீயணைப்புத்துறை யினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.