சாவித்திரியின் முகம் வாடிப் போய் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கான இடம் தயார். மாணவிகள் தயார். ஆனால், வகுப்புகளை எடுக்க வேண்டிய ஆசிரியர்கள் வரமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்காக தனி பள்ளிக்கூடமா என்று பலர் எதிர்த்தனர். பள்ளிக்கூடத்தை நடத்த விட மாட்டோம் என்று சூளுரைத்தனர். கணவரிடம் ஆலோசனை கேட்டார். நடத்தாமல் விடக்கூடாது என்று அவரும் உறுதியாக இருந்தார். வகுப்புகள் தொடங்கின. சாவித்திரி ஆசிரியையாகவும் மாறினார். உடன் ஃபாத்திமாவும் இணைந்து கொள்ள வகுப்புகள் தொடர்ந்தன. ஆனால்... பள்ளியில் இருந்து சோகமாக வீடு திரும்பினார் சாவித்திரி. வழியில் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் எறிந்த சேறு அவரது சேலையைப் பாழாக்கி இருந்தது. வழக்கத்திற்கு மாறாக, பெண்களுக்கு கல்வி கற்பிக்க அவர் துணிந்ததுதான் ஆண்களுக்குக் கோபம் வரக் காரணமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். அவரது கணவர் வேறு அப்போது வெளியூர் சென்றிருந்தார். கணவருக்குக் கடிதம் எழுதுகிறார். “வகுப்பு எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், போகும் வழியில் அவர்கள் எறியும் கல்லும், சேறும் உடையைப் பாழாக்கி விடுகின்றன. பாழாவது பற்றிக் கவலையில்லை. ஆனால், அப்படியே மாணவிகள் முன்னால் நிற்பதுதான் சிரமமாக உள்ளது” என்று எழுதினார். விரைவிலேயே பதில் கடிதம் வந்தது. “அவர்கள் தங்கள் வேலையைத் தொடரட்டும். நீ காலையில் பள்ளிக்குச் செல்கையில் பழைய சேலையை உடுத்திக் கொண்டு செல். பள்ளிக்குச் சென்றபிறகு, நல்ல சேலைக்கு மாறி விடு. அதேபோல் பள்ளி நிறைவு பெற்றவுடன், மீண்டும் பழைய சேலையை உடுத்திக் கொள்” என்று எழுதியிருந்தார். சாவித்திரியும் அப்படியே செய்தார். ஆனால், தொந்தரவுகள் நிற்கவில்லை. ஒருநாள்... கல்வெறிந்தவர்களில் ஒருவரை அழைத்தார். அருகில் வந்தவுடன் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அறை விட்டார். ஒரு பெண் இப்படி செய்வார் என்று எதிரபாராத ஆண்கள் சிதறி ஓடினார்கள். சாவித்திரியின் முகம் மலர்ந்தது. மேலும் பல பள்ளிகள் பெண்களுக்காக உருவாகின.
(சாவித்திரிபாய் பூலேயின் பிறந்தநாள் - ஜனவரி 3)