சென்னை,பிப்.10- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை ‘எய்ம்ஸ்’ (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) நியமித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணை யத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு நியமித்தது. அப்போது அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சாட்சிகளிடம் ஆணையம் ஓராண்டுக்கு மேல் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரியும், தங்கள் மருத்துவர்கள் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்குஅளிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் ஆணையத்துக்கு உதவ மருத்துவர்களை தேர்வு செய்து அறிவிக்க ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு அறிவுறுத்தியது. அப்போது விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க கோரிய அப்பல்லோவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந் நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை ‘எய்ம்ஸ்’ (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) நியமித்துள்ளது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறையின் தலைவர் மருத்துவர் நிகில் தாண்டன், குழுவின் தலைவராகவும் மருத்துவர்கள் ராஜீவ் நரங், ஆனந்த் மோகன், விமிரிவாரி, நிதிஷ் நாயக், வி.தேவ கவுரோ ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அதில் இடம் பெற்றுள்ளனர். இதில் மருத்துவர் அனந்த் நவீன் ரெட்டி, உறுப்பினர் செயலராக வும், மருத்துவர் விஷால் போகாட் பார்வையாளராகவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர்வதற்காக பிப்ரவரி 16 ஆம்தேதி ஒரு கூட்டத்துக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.