நத்தம்,மே 2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் மாமரங்கள் விவசாயிகளால் பராமரிக்கப்பட்டு சாகுபடி செய்யபட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பூக்கள் பூத்து பிஞ்சாகி காயாகி தற்போது இந்த மாதம் தொடக்கத்தில் விளைச்சல் பெற்று கடும் வறட்சிக்கு இடையே அறுவடையாகும் பணி தொடங்கிவிட்டது. இதில் கல்லாமை மாங்காய் ரகம் 1 கிலோ ரூ.20முதல் ரூ.30 வரையிலும், பாலாமணி ரகம் ரூ.30 முதல் ரூ.60 வரையிலும்,சப்பட்டை ரகம் ரூ.30 முதல் ரூ.70 வரையிலும் மொத்த கடைகளிலும், சில்லரை கடைகளிலும் விற்பனையாகி வருகிறது. இதுகுறித்து மா, மர விவசாயிகள் வேம்பார்பட்டி அபுதாகீர்,வத்திபட்டி மனோகரன் ஆகியோர் கூறுகையில், கடந்த வருடத்தை விட மா விளைச்சல் 40 சதவீதம் மகசூல் பெற்றுள்ளது. மேலும் 60 சதவீத மாமரங்கள் பூக்காமலும், காய்க்காமலும் வெறும் மரங்களாகவே காட்சி தருகிறது. இதற்கு மாமரங்களுக்கு விவசாயிகள் அதிக மருந்துகள் தெளிப்பதாலும் மற்றும் கோடை மாங்காய் காய்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஊட்டச்சத்து என்ற ரசாயன மருந்தை மாமரங்களுக்கு பயன்படுத்திவிட்டனர். இதனால் ஏராளமான மாமரங்கள் பட்டுபோய் பயனற்று போய்விட்டது. இந்த வருடத்தில் பல கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நத்தம் பகுதி மாம்பழங்கள் வெளிமாவட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மாம்பழ சீசன் வருகிற ஜூன் மாதம் கடைசியில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தனர்.