பெரம்பலூர், ஜன.10 - அரசு கேபிள் டிவி தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பலனாக தற்போது புதிதாக பல உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும், இ-சோனி உள்ளிட்ட கட்டண சேனல்களும் கூடுதலாக வழங்கப்பட்டு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தற்போது அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் கைகளில் கணிசமான எண்ணிக்கையில், செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களே உள்ளன. இதனால் அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்க இயலாத சூழ்நிலை உருவாவதோடு,அரசுக்கு கணிசமான அளவில் பண இழப்பும் ஏற்படுகிறது. இது ஏற்புடையதல்ல. எனவே மூன்று மாதங்களுக்கு மேல் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டியது உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பொறுப்பாகும்.
இதில் பொதுமக்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க மறுப்பதாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. அரசு இலவசமாக வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் அல்லது அதனை கேபிள் ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் செட்டாப் பாக்ஸ்களை தேவைக்கேற்ப உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும். செயலாக்கம் செய்யப்படாத செட்டாப் பாக்ஸ்களை பெரம்பலூர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேணடும். தவறும்பட்சத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலுக்காக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள்
மேற்கொண்டு செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒப்படைக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களாக உரிமம் பெற்று தொழில் செய்து வருகிற உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதுவரை செலுத்தாமல் உள்ள ரூ.141.49 லட்சம் அனலாக் நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.