புதுச்சேரி, பிப். 2- உலக புற்றுநோய் தினம் வரும் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உழவர்கரை நகராட்சி சார்பில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு புற்று நோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய சீருடையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் முக்கியம். நகராட்சி பணியாளர்களின் பங்கு இதில் இன்றியமையாதது. அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் அதை ஒழிக்கலாம். 30 வயதை கடந்த இருபாலினரும் புற்றுநோய் சோதனை செய்ய வேண்டும். வாய், மார்பகம், கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம்” என்றார். இதில் எம்.எல்.ஏ. சிவசங்கரன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், ஆட்சியர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, துணை இயக்குநர்கள் முரளி, ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.