புதுச்சேரி, அக். 8- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப் படுவது வழக்கம். அதிகரித்து வரும் பண வீக்கத்துக்கு ஏற்ப ஒன்றிய அரசு ஊழியர் கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்துவது நடை முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் புதுவை அரசு ஊழியர்க ளுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப் பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அரசின் நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராம கிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 விழுக்காடாக இருந்த அகவிலைப்படி, 4 விழுக்காடு உயர்த்தி, 38 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்துமா என்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தனியாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதனால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.