புதுக்கோட்டை, நவ.21- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் சுத்தமற்ற குடிநீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி கூலாட்சிகொல்லை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மின்மோட்டார் பழுதாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்றுள்ளது. அந்த தண்ணீர் மிகவும் கலங்களாக சுத்தமற்ற முறையில் இருந்துள்ளது. இதுகுறித்து பல முறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் உடனே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் வாடிமாநகர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, கீரமங்கலம் காவல்துறையினர், திருவரங்குளம் ஒன்றிய அலுவலர்கள் இரு தினங்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.