districts

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயிர்க் காப்பீடு செய்யலாம்

புதுக்கோட்டை, நவ.11 - சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய 15.11.2022 கடைசி நாள் என்பதால் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் 12.11.2022 மற்றும் 13.11.2022 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் செயல்படும்.  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05 செலுத்தி பயிர் காப்பீடு செய்து வரும் நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 15. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய 15.11.2022 கடைசி நாள் என்பதால் விவசாயிகள் நலன் கருதி 12.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர் காப்பீடு செய்யப்படும். இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு பதிவு பணி மேற்கொள்ளப்படும். எனவே, இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிரினை உரிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றார்.