அறந்தாங்கி, மார்ச் 11 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே குளத்துகுடியிருப்பு - பெருநாவலூர் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்று இருப்பதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பெ ருந்துறை ஊராட்சியில் உள்ள குளத்துகுடியிருப்பு பகுதியில் சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு, ஆவுடையார்கோ விலிலிருந்து காரைக்குடியை இணைக்கும் இணைப்புச் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால், இப்பகுதி வழியாக வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வழியாக காரைக்குடிக்கு ஒரு பேருந்தும், அறந்தாங்கி நகர பேருந்துகளும் இயங்கி வந்தன. சாலை குண்டும் குழியு மாக உள்ள நிலையில், உரிய நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியாததால் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். இப்பகுதி மக்கள் ஆவுடையார்கோவில் செல்ல வேண்டுமென்றால் இரு சக்கர வாகனத்திலோ அல்லது நடந்தோதான் செல்ல வேண்டும். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இந்த சாலைக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனர். இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையில் இணைத்து தமிழக அரசு, புதிய சாலை அமைத்து பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.