districts

img

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.26 - கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.மணிமாறன், பொருளாளர் எம்.முத்துகிருஷ்ணன், அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினவேல், நகர ஒருங்கிணைப்பாளர் ஏ.முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கேரளாவில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் ஆட்டோவுக்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் தொடங்க வேண்டும். எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.  ஆட்டோ தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு, ஓட்டுநர்களுக்கு இலவச வீடு கட்டித்தர வேண்டும். ஆட்டோக்களுக்கு தினமும் தலா 5 லிட்டர் வீதம் பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;