அறந்தாங்கி, ஏப்.13 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் அமைப்பு 2005 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 17 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு, சமூக நீதி என்னும் 5 தளங்களில், அறந்தாங்கி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின், மாணவர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைத்து வருகிறது. அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதன் செயல்பாடுகளை தமிழக அளவில் அங்கீகரிக்கும் விதமாக, மக்கள் பாதை இயக்கம், சிறந்த சமூக செயல்பாட்டிற்கான விருது வழங்கி கௌரவித்து உள்ளது. சென்னையில் நடைபெற்ற அந்த இயக்கத்தின் முப்பெரும் விழாவில், திசைகள் அமைப்பு சார்பாக டெய்ஸி ராணி, பூங்குன்றன், யோகாநந்தி ஆகியோர் பங்கேற்று விருதை பெற்றுக் கொண்டனர். “விளிம்புநிலை மக்கள், மாணவர்களுக்கான விடியலை நோக்கிய எமது பயணம் எப்போதும் போல் உற்சாகமாய் தொடரும்” என்று திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு தலைவர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி கூறினார்.