districts

img

திருச்செங்கோடு: எச். ராஜா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலைந்து சென்ற பொது மக்களால் பாஜகவினர் அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ம் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்த இருவழிச்சாலையில் ஒரு வழிச்சாலையை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார்  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக எச்.ராஜா பங்கேற்றிருந்தார்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே 2000 சேர்கள் போட்டு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் பாஜக துணைத் தலைவர் கோட்ட பொறுப்பாளர்  கே.பி ராமலிங்கம் பேசியபோது, திருச்செங்கோட்டில் பாஜக கட்சி எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு இந்த கூட்டம் தான் சாட்சி.... கடல் போல கடைக்கோடி வரை திரண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலாக காட்டுகிறேன் என்றார் ...

மேலும், மத்திய அரசின் சாதனைகளை குறித்து கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்துதலுக்கு எடுத்த முயற்சியால் நாம் இங்கு முகக் கவசம் அணியாமல் பாதுகாப்புடன் இருக்கிறோம் மோடி தான் நாம் உயிரை காப்பாற்றியவர் என ஒன்பது ஆண்டு சாதனைகளை விளக்கி மக்களிடம் பேசி உரையை முடித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக  சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா பாஜக வின் சாதனைகள் குறித்து பேச துவங்கினார் .அவர் பேசத் துவங்கிய உடன் மக்கள் கூட்டம் சாரை சாரையாக கலைய ஆரம்பித்தது. கலையும் மக்களை அமர சொன்ன பாஜக நிர்வாகிகளுக்கும், மக்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது..

கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்றதால் வேறு வழியின்றி பல்வேறு கிராம பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் சரக்கு வாகனங்களில் கிளம்பினர்.

பாஜக ஒன்பதாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த முயற்சித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  மக்களை திரட்டியும் நிகழ்ச்சியின் நடுவிலேயே வெறிச்சோடிய சேர்களால் ஒன்றிய அரசின் சாதனை விளக்க கூட்டம் சலசலப்பு கூட்டமாக மாறிப்போனது.