districts

img

மூளைச்சாவு அடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்: குவியும் பாராட்டு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை, பிறருக்கு தானமாக வழங்கிய பெற்றோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் முகேஷ் (26), மகள் பாரதி. இதில் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், டிப்ளமோ முடித்துள்ள முகேஷ், நாகையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி முகேஷ் கொளப்பாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திருப்பூண்டி காரை நகர் அருகே முகேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு முகேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மதியம் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்த விவரத்தை முகேஷின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு உடலுறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து முகேஷின் பெற்றோர், எங்களின் மகன் உறுப்புகள் தானம் மூலம் பிறரின் உடலில் வாழப்போகிறான் என்ற மகிழ்ச்சி தான் எங்களுக்கு எனக் கூறி, உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து முகேஷின் கிட்னி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஒருவருக்கும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருவருக்கும், பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் ஒருவருக்கும், கண்கள் மதுரை கண் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் துரிதமாக கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. 

விபத்தில், மகனை இழந்த துயரத்திலும், உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்த முகேஷின் பெற்றோரை பலரையும் பாராட்டியுள்ளனர்.