திருவள்ளூர், டிச 17- திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு முன்கூட்டியே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரி வித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில், சம்பா 2022 பருவத்தில் (கேஎம்எஸ் 2022-23) 51687.664 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதலுக்கு 85000 மெட்ரிக் டன் நெல் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள அரசு கிடங்குகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்தி முதற்கட்டமாக அம்பத்தூர், கடம்பத்தூர், பூண்டி, திரு வாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப் பட்டு மற்றும் எல்லாபுரம், ஆகிய 8 வட்டாரங்களில் 38 இடங்களில் தேவைக்கேற்ப உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்கொள்முதல் செய்யப்படும். எனவே, விவசாயிகள் அந்தந்த பகுதி நேரடி நெல்கொள்முதல் நிலைய இணையதளத்தில் பதிவு செய்து குவிண்டால் ஒன்றுக்கு சன்னரக நெல் ரூ.2160, பொது ரக நெல் ரூ.2115க்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் தலையீட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.