திருவள்ளூர், டிச.14- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில் உள்ள செங்கரை ஊராட்சியில் பழைய காலனியில் 50 கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வழங்கப்படும் குடிநீர் குழாய் சுமார் 10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலத்தில் உள்ள கழிவுநீர், குடிநீருடன் கலந்து தண்ணீர் அசுத்தமாக வருகிறது. இந்த தண்ணீரை பருகுவதால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். உடைப்பை சரிசெய்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டதால் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வார மாக காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து நீரோடையாக செல்கிறது. இந்த தண்ணீரை மக்கள் அச்சத்துடன் பருகுவேண்டியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊத்துக்கோட்டை பகுதி செயலாளர் எஸ்.சிவநேசன், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனை வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி. மதன் வன்மையாக கண்டித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தரமான குழாய்களை அங்கு பதிக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மேலும் பொறுப்பற்ற முறையில் பேசும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.