திருவள்ளூர், மே 18- தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழி சாலை திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் புதனன்று (மே 18) நடைபெற்றது. இதில் ஒன்றிய குழுத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்
தாராட்சி, லட்சிவாக்கம், சென்னங்காரணி, காக்கவாக்கம், ஆத்துப்பாக்கம், பெரியபாளையம், வடமதுரை, வெங்கல், கன்னிகைப்பேர், திருக்கண்டலம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை மற்றும் தார்சாலை , பைப்லைன் அமைப்பதற்கு ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . கோடுவெளி, கன்னிகைப்பேர், பெரியபாளையம், பாகல்மேடு ஆகிய பகுதிகளில் பைப்லைன், சுடுகாடு மதில் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.43 லட்சத்து 72 ஆயிரத்து 628 ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி கலந்து கொண்டு பேசுகையில், பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்க முப்போகம் விளையக்கூடிய நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. விவசாயம் பாதிக்காத வகையில் மாற்று வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.