districts

img

ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

திருவண்ணாமலை, அக். 7- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே, ஐம்பொன் சிலை திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 9 சிலைகளை மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூரில் குருமன்ஸ் இன பழங்குடியினர் வழிபட்டு வரும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபத்திர சுவாமி கோவிலில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுப்பது வழக்கம். அதன்படி, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி வழிபாடு நடத்த சென்றபோது, அங்கு கோவிலில் இருந்த வீரபத்திரன், சிவன் பார்வதி உள்ளிட்ட 9 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து, தானிப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக மோட்டர் பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரணை நடத்தியதில், மெய்யூர் மணிகண்டன் (25), நூக்காம்பாடி சதீஷ் (25) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் 7 ஐம்பொன் சிலைகளை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், மலமஞ்னூரை சேர்ந்த மணிகண்டன் (26), மயிலாடுதுறை மணல் பேட்டையை சேர்ந்த திவாகர் (27) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, அவர்களிம் இருந்து 9 சிலைகளையும் மீட்டனர்.