திருவண்ணாமலை, ஜன. 2- திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனா மரத்தூர் மலைக்கிராமத்தில் உள்ளது பீமன் நீர்வீழ்ச்சி. இங்கு சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி என சுற்றுலா மையங்கள் அதிகம் உள்ளன. கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சில்லென்று காற்று வீசுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பீமன் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். விடுமுறை நாட்களில் பீமன் அருவிக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.