districts

img

பிஏபி திட்டத்தில் அணை கட்டக் கோரி நம்ம நல்லாறு நடை பயண இயக்கம் தொடக்கம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலை ஆறு நல்லாறு அணைகள் கட்ட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் "நம்ம நல்லாறு" நடை பயணம் தொடங்கப்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 4 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் வழங்குவதுடன், பல லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கக் கூடியதாகவும் கடந்த 60 ஆண்டு காலமாக பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையில் பாசன திட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.  நல்லாறு அணை கட்டுவதன் மூலம், பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் பயணித்து வரவேண்டிய தண்ணீர், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பயணித்து திருமூர்த்தி அணைக்கு வந்து சேரும். இதன் மூலம் கூடுதல் தண்ணீர், கூடுதல் நாட்கள் கிடைக்கும்.

எனவே, நல்லாறு அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பிஏபி விவசாயிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் இக் கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட இயக்கங்கள் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில், ஜூன் 10 முதல் 12 மூன்று நாட்கள் நம்ம நல்லாறு  நடை பயண இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சனியன்று காலை பல்லடம் அருகே அருள்புரத்தில் இந்த நடை பயணத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளரும், பல்லடம் ஒன்றிய செயலாளருமான வை.பழனிச்சாமி தலைமை ஏற்றார். கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் பி. டில்லிபாபு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் இந்த இயக்கத்தை வாழ்த்தி பேசினர்.

விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன் உள்பட பல்வேறு சகோதர அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்தி நடைபயணத்தை வழி அனுப்பி வைத்தனர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் செங்கொடியுடன் நம்ம நல்லாறு கோரிக்கை முழக்கம் எழுப்பியபடி அணிவகுத்து சென்றனர். சனியன்று பல்லடம் மற்றும் பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் இக்குழுவினர் நடைபயண பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இரண்டாம் நாள் ஞாயிறு அன்று குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களிலும், மூன்றாம் நாள் குடிமங்கலம் மற்றும் உடுமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நடைபயணம் செல்கின்றனர். திங்களன்று மாலை உடுமலை நகரில் நடை பயண நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.

முதலமைச்சர் நிதி ஒதுக்க வேண்டும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் நல்லாறு அணை கட்டுவதற்கு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

பல்லடம் அருகே அருள்புரத்தில், நம்ம நல்லாறு நடைபயண இயக்கத்தை தொடங்கி வைத்த பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. நல்லாறு அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த காலங்களிலும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்றவற்றை ஆளும் அரசுகள் நிறைவேற்றுவதாக ஏற்றுக் கொண்டனர். அதேசமயம் இந்த கோரிக்கைகள் மீது மக்கள் கருத்து வலுப்பெறும் போது திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும். அந்த அடிப்படையில் பிஏபி விவசாயிகள் உணர்வுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து ஏற்கனவே, ஒன்றிய அரசிடமும் விபரங்கள் கொடுத்திருக்கிறோம். அடுத்து நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வலியுறுத்துவோம் என்று பி.ஆர்.நடராஜன் கூறினார்.

முன்னதாக தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் இஎம்எஸ் அரசு இருந்தபோது இத்திட்டம் தொடங்கப்பட்டது. இப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கேரளாவில் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்பிரச்சனையில் தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியில் கோரிக்கை வைத்தால் கூட ஏதேனும் காரணத்தைச் சொல்லி தாமதப்படுத்தலாம். ஆனால் விவசாயிகள் களத்திற்கு வந்து விட்டால் அவர்கள் கோரிக்கையை அரசுகள் கட்டாயம் நிறைவேற்றும்.

ஏனென்றால் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டோம், பணிய மாட்டோம் என்று பிடிவாதமாக செயல்பட்ட ஒன்றிய அரசின் பிரதமரையே மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைத்த சக்தி மகத்தான விவசாயிகள் இயக்கத்திற்கு உண்டு. தற்போது கூட மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் விவசாயிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று கெடு விதித்தனர். இதையடுத்து ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் போராடிவரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியளித்திருக்கிறார். எனவே விவசாயிகள் முன்னெடுத்து இருக்கும் இந்த மகத்தான இயக்கம் வெற்றி பெறும் என்று பி.ஆர்.நடராஜன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வாழ்த்தி பேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி.டில்லிபாபு கூறுகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது. அதுபோல் நம்ம நல்லாலாரி நடை பயணத்தின் நோக்கமும் முழு வெற்றி பெறும் என்று கூறினார்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேசிய ஈஸ்வரன் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொடக்கி வைக்கும் இந்த நடைபயணம் நிச்சயம் வெற்றி பெறும். பல்வேறு விவசாயிகள் தனித்தனியாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து கோரிக்கையை வலிமையாக முன் வைக்கும் சக்தியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்த நடைபயண இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. எனவே நிச்சயம் வெற்றி பெறும்.

நல்லாறு அணை கட்டுவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் முழுமையாக ஆதரவு அளித்து உடன் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.