districts

img

பட்டியலின வாலிபர்கள் மீது தாக்குதல் : அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, நவ. 2- திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தொடர்வன்கொலைகள் மற்றும் கொலைவெறி தாக்குதல்களை தடுத்திட வேண்டும், இதுபோன்ற மனிதத் தன்மையற்ற முறையில் நடைபெறும் வன்கொடுமைகளை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வேண்டும்.  திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரபுர பட்டியலின இளைஞர்கள் மனோஜ் குமார், மாரியப்பன் ஆகிய இருவரை மாற்று சமூக வெளியூர் இளைஞர்கள் ஆறு பேர் திங்களன்று மாலை ஊருக்கு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றவர்களை வழிமறித்து, அவர்கள் மீது மனிதத் தன்மையற்ற முறையில் சிறுநீர்  கழித்து வன்கொடுமை செய்தும் அரிவாள்,கத்தி, கம்புகளை வைத்து கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இதைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பில்  அனைத்துகட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர்  ஆர்.மதுபால் தலைமை  தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர்  க.ஶ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சடையப்பன்,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில குழு  உறுப்பினர்  ஜி.ரமேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் சுடலைராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் முத்து வளவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் கலை கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி, தென் மண்டல செயலாளர் கணேசன் பாண்டியன், சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் டி.நாராயணன், பாளையங் கோட்டை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழரசு, திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் திரு குமரன், மகளிர் அணி செயலாளர் மீனா, பூர்வீக தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் கு.பழனி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.