districts

வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் நிரம்பவில்லை விவசாயிகள் கவலை

திருநெல்வேலி, நவ.25- திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் வடக்கு விஜயநாராயணத்தில் பெரியகுளம் அமைந் துள்ளது. இந்தக் குளம் மேற்கே ஐ.என்.எஸ். கட்ட பொம்மன் கடற்படைத் தளம் முதல் கிழக்கே குட்டத்தட்டி பாறை வரைக்கும் சுமார் ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் பரந்து விரிந்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழை மூலமும், நம்பியாற்றில் இருந்து வரும் தண்ணீர், மணிமுத்தாறு கால்வாயில் வரும் தண்ணீர் மூலமும் குளம் நிரம்பி விடும்.  இந்தக் குளம் ஒரு முறை நிரம்பினால் கீழ்ப்பகுதியில் உள்ள இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, அழகப்பபுரம், சுவிசேஷபுரம் மற்றும் சாத்தான்குளம், ராதாபுரம் பகுதிகளில் உள்ள கிணறுகள், இடைச்சிவிளை தேரி பகுதிகளில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துவிடும்.  இந்த ஆண்டு இதுவரை போதிய மழை பெய்ய வில்லை. இதனால் குளத்தின் பெரும்பாலான பகுதி வறண்டும், அதே நேரத்தில் ஒரு சில பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கியும் உள்ளது. நம்பியாற்று கால்வாய்களிலும் தண்ணீர் வரவில்லை. தற்போது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை குளத்தின் உட்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் குளத்து நீரை நம்பி நாற்றுப் பாவி யுள்ளனர்.  சிலர் மழை பெய்யாததால் நாற்றுக்களை நடாமல் அப்படியே விட்டுள்ளனர்.  இன்னும் சில நாட்களில் போதிய மழை பெய்யா விட்டால் இந்த ஆண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் விவசாயிகள் கவலை யில் உள்ளனர். 

;