districts

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, மார்ச் 13 - 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த ஏம்பல் அருகே தாணிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் பிரதீப் (21). கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, இவர் வெடி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார்.  இது தொடர்பாக சிறுமியின் தாய், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார் பிரதீப்-ஐ கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயந்தி, இளைஞர் பிரதீப்-க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதத் தொகையும், அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி பிரதீப் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.