districts

12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்

வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பு voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு செல்லலாம்.

வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த 1. ஆதார் அட்டை, 2. நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card), 3. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, 4. ஒன்றிய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, 5. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், 6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, 7. ஒன்றிய - மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், 8. ஓட்டுநர் உரிமம் (Driving license), 9. கடவுச்சீட்டு (Passport), 10. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 11. ஓய்வூதிய ஆவணம், 12. நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய மேற்கூறிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். 
அதே போல, 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 20ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் அசல் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக்கொண்டு வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடி வளாகத்துக்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச் சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது.

முதியோர் - மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு சிறப்பு வசதி 

மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. 

மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரபிடோ பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு “கடமைக்கான சவாரி” என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களாக இருப்பார்கள். 

வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும். பூத் சிலிப் கட்டாயம்  இல்லை. வாக்களிக்க செல்லும்போது வாக்குச்சாவடி வாசல் அருகே உதவி மையம் இருக்கும். அங்கிருக்கும் தன்னார்வலர்களும் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.