தஞ்சாவூர், ஜூன் 14-
தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப் பள்ளி, பூதலூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமையில் விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன் சேவியர், முனியய்யா, சத்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீதை விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனையா ளர்கள், நெல் விதைகளின் முளைப்பு திறனை கட்டாயம் உறுதி செய்த பின்னர் மட்டுமே விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்ய வேண்டும் என எச்சரித்தனர்.
மேலும் அவர் கூறுகையில், ‘‘மாவட்டத்துக்குட்பட்ட 31 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 49 விதை நெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முளைப்பு திறன் பரிசோதனைக்காக தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்தில் அளிக்கப்பட்டது.
விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலை யங்களில் 13 விதை குவியல்களில் ரூ. 17.18 லட்சம் மதிப்புள்ள 44.72 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.