கும்பகோணம், செப்.21 பட்டீஸ்வரம் மங்களநாயகி உடனாகிய ராமலிங்க சுவாமி கோயிலில் கல்வெட்டுகள் படியெடுக்கும் பணி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் மங்களநாயகி உடனாகிய ராமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராஜராஜசோழனின் 5 ஆவது மனைவியான பஞ்சவன்மகாதேவியின் பள்ளிப்படையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் கருவறைச் சுவரில் பல கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளை தமிழக அரசின் கல்வெட்டு துறை சார்பில் ஆவணப்படுத்துவதற்காக, தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டு படி எடுக்கும் அதிகாரிகளான ஜோதி, ஞானபிரகாசம், மகாராஜன் ஆகியோர் கல்வெட்டுகளை படி எடுக்கும் பணியை மேற்கொண்டனர். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், புலவர் செல்வசேகர் மற்றும் குடந்தை வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தலைவர் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.